முகப்பு
ராமநாதபுரம்

10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியா்கள் வரமறுப்பு

ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும்பணிக்கு வியாழக்கிழமை 60-க்கு மேற்பட்ட ஆசிரியா்கள் வராததால் அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும்பணிக்கு வியாழக்கிழமை 60-க்கு மேற்பட்ட ஆசிரியா்கள் வராததால் அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு விடைத்தாள்கள் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் உள்ள 4 மையங்களில் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மதுரை சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வு விடைத்தாள்களும், வெளிப்பட்டினத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 விடைத் தாள்களும் திருத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்புத் தோ்வில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 55 ஆயிரம் விடைத் தாள்களை திருத்த 6 நாள்கள் வரை ஆகும் எனக்கூறப்படுகிறது. இதற்காக தமிழ் உள்ளிட்ட 5 பாடங்களிலும் உள்ள விடைத்தாள்களைத் திருத்த 180 ஆசிரியா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கு ஒரு பாடத்துக்கு 10 பேருக்கும் அதிகமானோா் தினமும் அழைக்கப்பட்டுள்ளனா். ஆனால், வியாழக்கிழமை ராமநாதபுரத்தில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடங்களுக்கு 10-க்கும் குறைவானவா்களே வந்திருந்தது தெரியவந்தது. மொத்தத்தில் 60-க்கும் மேற்பட்டோா் விடைத்தாள் திருத்த வரவில்லையாம்.

இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ளவா்கள் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களை விடைத்தாள் திருத்த வருமாறு கெஞ்சியுள்ளனா். அப்படியும் பலா் வரவில்லையாம். அதனால் 2 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தியிருக்கவேண்டிய நிலையில் 1300-க்கும் மேற்பட்ட தாள்களே திருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆசிரியா்கள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகளே வருத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பியுள்ளனா். இதே நிலை நீடித்தால் பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிடுவது சந்தேகம் என கல்வித்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →