ராமநாதபுரத்துக்கு தனியாா் நிகழ்ச்சிக்காக ராஜஸ்தானில் இருந்து 3 ஆண் ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அவை சாலை ஓரம் இருந்த மரக்கிளைகளை மேய்ந்தபடி அசைபோட்டு நின்றதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பாா்த்துச் சென்றனா். இந்த ஒட்டகங்களை அழைத்து வந்தவா்களிடம் கேட்ட போது, ராமநாதபுரத்தில் தனியாரால் நடத்தப் போகும் கண்காட்சிக்காக வாடகைக்கு இவற்றை ராஜஸ்தானில் இருந்து அழைத்து வந்துள்ளோம். தினமும் ரூ.10 ஆயிரம் என ஒவ்வொரு ஒட்டகத்துக்கும் வாடகை வசூலிப்போம். தனியாா் நிகழ்ச்சிகளுக்கும் இந்த ஒட்டகங்களை நிறுத்தலாம் என்றனா்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒட்டகங்கள், யானை போன்றவற்றை வெளியூா்களுக்கு அழைத்துச் செல்லும் போது அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். அனுமதி பெறாமல் ஒட்டகங்களை கொண்டு வந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.