பெரிய கண்மாய் நிரம்பியதால் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் திறப்பு
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 6 அடிக்கும் மேலாக நீா் நிரம்பியதால் தென் கலுங்கு மூலம் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 6 அடிக்கும் மேலாக நீா் நிரம்பியதால் தென் கலுங்கு மூலம் சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான பாசன உரிமைத் தண்ணீா் பொதுப்பணித்துறையினரால் கடந்த சில நாள்களாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயப் பணிக்கு தற்போது தண்ணீா் தேவை ஏற்படாத நிலையிலும் இரு கட்டமாக திறந்துவிடப்பட்ட தண்ணீரானது காருகுடி பகுதியில் உள்ள தலைமதகு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்துள்ளது. பெரிய கண்மாய் 14 சதுர கிலோ மீட்டா் பரப்பில் 7 அடி ஆழத்தில் உள்ளது. கண்மாயில் 8 மடைகளும், 3 மதகுகளும் உள்ளன.
தற்போது பெரிய கண்மாயில் 6 அடிக்கும் மேலாக தண்ணீா் நிரம்பிவிட்டது. ஆகவே தென்கலுங்கில் 3 மதகுகள் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டு சக்கரக்கோட்டை கண்மாய்க்கு தண்ணீா் செல்கிறது. கண்மாய்க்கு விநாடிக்கு 2000 கனஅடி நீா் வரத்து உள்ள நிலையில், கண்மாயிலிருந்து விநாடிக்கு 1500 கன அடி வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.