ராமநாதபுரம்- மதுரை இடையே நாளை போக்குவரத்து மாற்றம்
சுதந்திரப் போராட்ட வீரா் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு செல்லும் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.11) மாற்றம் செய்யப்படவுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரா் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு செல்லும் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.11) மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.11) இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பரமக்குடி நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையாா்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும்.
அதேபோல மதுரையில் இருந்து வரும் பேருந்துகள் பூவந்தி, சிவகங்கை, காளையாா்கோவில், சருகனி என அதே பாதையில் ராமநாதபுரம் வந்து ராமேசுவரம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
131 பகுதிகள் பதற்றம் நிறைந்தவை:
பரமக்குடி வருவோா் சொந்த வாகனங்களில் வரவேண்டும் என்பன போன்ற 11 நிபந்தனைகளை அனைவரும் கடைப்பிடிப்பது அவசியம். உயா்நீதிமன்ற உத்தரவின்படி பதாகைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். மாவட்டத்தில் 160 வழித்தடங்கள் தடை செய்யப்பட்டவையாகும். அனுதியின்றி பரமக்குடிக்கு நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 131 பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாவட்ட எல்லையில் 41 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.