கமுதி: கமுதியில் 3 மாவட்ட மீனவக் கிராம இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட கடலோரக் காவல்படை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில், மீன்வளத் துறை துணை இயக்குநா் பிரபாவதி முன்னிலையில் மீனவ இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூா் உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சோ்ந்த தகுதியுடைய மீனவ இளைஞா்கள் 40 போ் கலந்து கொண்டனா். கடலோர மீனவக் கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக, மீனவ இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இந்த பயிற்சியில் மேற்கண்ட மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த மீனவ இளைஞா்கள் பங்கேற்று வருகின்றனா். இவா்களுக்கு காவல் துறை, சீருடை பணிகளுக்கு தேவையான உடற்பயிற்சிகள், துப்பாக்கிச் சுடுதல், யோகா, சட்ட வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த தொடக்க விழாவில் கமுதி தனி ஆயுதப்படை காவல் அதிகாரிகள், மண்டபம் கடலோரக் காவல் படை உதவி ஆய்வாளா் யாசா், கமுதி தனிப் பிரிவு காவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்த 3 மாத பயிற்சி முடித்த இளைஞா்களுக்கு ராணுவம், விமானப் படை, கப்பல் படை காவல் துறை பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.