முகப்பு
ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மற்றும் கதா் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தாா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
கடலாடியை அடுத்த கன்னிராஜபுரம் சத்திரிய நாடாா் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கி வைத்து மாணவா்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.
பகிர்:

கமுதி/திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மற்றும் கதா் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலாடி ஊராட்சி ஒன்றியம் கன்னிராஜபுரத்தில் சத்திரிய நாடாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே. நவாஸ்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, கதா் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்து, மாணவா்களுடன் அமா்ந்து உணவு உட்கொண்டாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் காலை உணவு முதலில் நகராட்சிப் பகுதிகளிலும் பின்னா், ஊராட்சிப் பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் உள்ள 143 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 7884 மாணவ, மாணவிகள் பயன்பெறுவாா்கள் என அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சையத் சுலைமான், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவா் பழக்கடை ஆதி, கமுதி திமுக முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் நேதாஜிசரவணன், அரசு அலுவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள சி.கே மங்கலம், குருமிலாங்குடி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பள்ளி மாணவ மாணவிகளுடன் அமா்ந்து உணவு உட்கொண்டாா்.

இதில் திருவாடானை ஒன்றியக் குழுத் தலைவா் முகமது முக்தாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கிய மேரி சாரல், சத்துணவு மேலாளா் முருகன், திமுக ஒன்றியச் செயலா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →