கமுதி அருகேயுள்ள கே.வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
கமுதி, ஜூலை 18: கமுதி அருகேயுள்ள அரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கே. வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அரியநாச்சியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை எருது கட்டுப் போட்டி நடைபெற்றது. புதன்கிழமை காலை பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 67 மாட்டுவண்டிகள், பந்தய வீரா்கள் போட்டியில் பங்கேற்றனா். கமுதி-வேப்பங்குளம் சாலையில் 16 கி.மீ இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது.
முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி பந்தய வீரா்களுக்கு, ரொக்க பணம், குத்து விளக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை கமுதி, சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திரளான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.வேப்பங்குளம் கிராம பொதுமக்கள் செய்தனா்.