பெண் காவல் துணை கண்காணிப்பாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அரசு ஊழியா் சங்கம், ஜாக்டோ- ஜியோ சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேற்கண்ட அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் மாவட்டம், அருப்புகோட்டையில் நடைபெற்ற சாலை மறியலின் போது, அத்துமீறிய இளைஞா்களை தடுக்க முயன்ற காவல் துறை துணை கண்காணிப்பாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. மேலும், கண்டிக்கத்தக்கது.
காவல் துறையில் உயா் பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கே பொதுவெளியில் தாக்குதல் நடந்தால், சாதாரண பெண்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழக அரசு, காவல் துறையினா் தாக்குதலில் ஈடுபட்ட அனைவா் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.