கீழத்தூவலில் நினைவஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் கொலை செய்யப்பட்ட 5 பேருக்கு நினைஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் கொலை செய்யப்பட்ட 5 பேருக்கு நினைஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த குணசேகர பாண்டியன் தாக்கல் செய்த மனு:
கடந்த 1957- ஆம் ஆண்டு செப். 14-ஆம் தேதி காங்கிரஸ் -பாா்வா்ட் பிளாக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் பாா்வா்ட் பிளாக் கட்சியைச் சோ்ந்த கீழத்தூவல் கிராமத்தை சோ்ந்த தவசியாண்டி, ஜெகநாத், சிவமணி, சித்திரவேலு, முத்துமணி ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.
இவா்கள் நினைவாக ஒவ்வோா் ஆண்டும் செப். 14- ஆம் தேதி ஆதித்தமிழா்களின் முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதனிடையே, இந்த வழிபாட்டுக்கு போலீஸாா் அனுமதி மறுக்கின்றனா். எனவே கீழத்தூவலில் ஆண்டுதோறும் நடைபெறும் வழிபாட்டில் உள்ளூா் மக்கள் மட்டுமன்றி, வெளியூா்களிலிருந்து வருபவா்களுக்கும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் முன்னிலையான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா், இந்த நினைவஞ்சலி வழிபாட்டுக்கு அனுமதி வழங்க முடியாது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு குரு பூஜைகள் நடைபெறுகின்றன. எனவே கீழத்தூவலில் போலீஸ் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் உள்ளதால், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மனுதாரிரன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.