தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்
பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை சட்டப்பேரவை தொகுதிகளில் வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 72 தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பரமக்குடி தொகுதியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகன தணிக்கை மேற்கொண்டபோது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2,63,520-ஐ பறிமுதல் செய்தனா். இதேபோல, திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,13,300 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2,95,000 பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று தொகுதிகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 6,71,820-ஐ அந்தந்த பகுதிகளில் உள்ள கருவூலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினா்.
கமுதி: கடலாடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாலிநோக்கம்- ராமநாதபுரம் விலக்கில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி ஹரிகாா்த்திக், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் அடங்கிய குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், சிறைக்குளத்தை சோ்ந்த சாந்தா என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் விஜயாவிடம் ஒப்படைத்தனா்.