சிவகங்கையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருத்திய சோபான் என்ற அடிப்படை பயிற்சி முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் இப்பயிற்சி முகாம் கடந்த ஆக.10 இல் தொடங்கி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. சோழபுரம் சாந்தா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் உள்ள 67 பள்ளிகளிலிருந்து 134 சாரணர்,36 சாரணியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.சாந்தா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சாரண, சாரணிய இயக்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். சாந்தா கல்வியியல் கல்லூரியின் தாளாளர் மார்ஷியனா முன்னிலை வகித்தார்.இதில்,மாநில பயிற்றுநர் எபனேசர் சந்திரகாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கினார்.
பயிற்சி மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளை சாரண,சாரணிய இயக்கத்தின் செயலர் பொக்கிஷம்,பொருளாளர் அருளானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.மாணவ, மாணவிகளுக்கான பயிற்சியினை மாவட்ட பயிற்றுநர்கள் நரசிம்மன்,முத்துக்குமரன், இந்திராகாந்தி, மகாலெட்சுமி, ராணி,முத்துக்காமாட்சி, சொர்ணலட்சுமி ஆகியோர் அளித்தனர்.