சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் லதா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மானாமதுரை 1ஆவது வார்டு சாஸ்தா நகர் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை ஆய்வு செய்த அவர் குடிநீர் குளோரின் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். வாரம் ஒருமுறை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய பேரூராட்சி பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பின் நகரில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின், மானாமதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் காய்ச்சலின் தன்மை அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவனையில் நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என்பதைக் கேட்டறிந்து மருத்துவமனை பதிவேடுகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மகேஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் மார்க்கண்டன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.