காரைக்குடி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 11 கடைகளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பூட்டி "சீல்' வைத்தனர்.
காரைக்குடி நகராட்சிக்குச் சொந்தமாக வணிக வளாகங்கள் உள்ளன. இதில் குத்தகை அடிப்படையில் கடையை எடுத்து, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணா தினசரி சந்தை கடைகள், சுப்பிரமணியபுரம் கடைகள், செக்காலைச்சாலை கடைகள் மற்றும் புதிய பேருந்து நிலைய கடைகளிலிருந்து பல மாதங்களாக வாடகை செலுத்தாததால் ரூ. 40 லட்சம் வரை வாடகை பாக்கி இருந்து வந்தது.
இதையடுத்து உரியவாடகை செலுத்தும்படி சில தினங்களுக்கு முன்னர் நகராட்சி அதிகாரிகளால் 19 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நகரமைப்பு அலுவலர் வீ. பெரியசாமி தலைமையில், நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், பி. மாரிமுத்து, நகராட்சி மேலாளர் மற்றும் வருவாய் உதவியாளர்கள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையாளர் அ. சுந்தரம்பாள் உத்தரவிட்டிருந்தார்.
அதையடுத்து அக்குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று வாடகை நிலுவை வைத்திருந்த சுப்பிரமணியபுரம் வளாகத்தில் 8 கடைகளுக்கும், புதியபேருந்து நிலையத்தில் 2 கடைகளுக்கும், அண்ணா தினசரி சந்தை கடை ஒன்றும் என 11 கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.