கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை சிவகங்கை தாலுகா போலீஸார் குண்டர் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை அருகே உள்ள பனங்காடியைச் சேர்ந்த காளையப்பன் மகன் ராஜசேகர் (29). இவர் மீது சிவகங்கை தாலுகா, சாக்கோட்டை, காளையார்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் ராஜசேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின்பேரில் சிவகங்கை தாலுகா போலீஸார் ராஜசேகரை செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.