திருப்பத்தூர் அருகே கார் நிறுவனத்தில் தீ: ரூ. பல லட்சம் பொருள்கள் சேதம்
திருப்பத்தூர் அருகே மானகிரியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் பொருள்கள் சேதமடைந்தன.
திருப்பத்தூர் அருகே மானகிரியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் பொருள்கள் சேதமடைந்தன.
திருப்பத்தூர் அருகே மானகிரியில் காரைக்குடியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான தனியார் கார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இரவு 7 மணியளவில் பூட்டிய நிறுவனத்திற்குள் இருந்து புகை வெளியேறியதைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் தீ வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில் கார்கள், டயர்கள், ஆயில்கேன்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாகின. இவ்விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.