சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் பகுதியில் காளையார்கோவில் சரக காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே நடந்து வந்த 3 பேரை விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது காளையார்கோவில் அருகே உள்ள குண்டா குடையைச் சேர்ந்த கண்ணுச்சாமி மகன் கல்யாணசுந்தரம் (34), ராமநாதபுரம் சிகில் ராஜா வீதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தினேஷ்குமார் (29), மறவமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் தனசேகர் (38) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மூவரும் சாலைகிராமம் அருகே அளவிடங்கான் கூட்டுறவு வங்கி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த கார், இரண்டு போலி எண்கள் கொண்ட பிளேட்டுகள், லாக்கரை உடைக்க பயன்படும் சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.