காரைக்குடியில் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மணவாழன்வயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் சங்கீதா (26). இந்நிலையில் சங்கீதாவுக்கும் காரைக்குடியைச் சேர்ந்த அருணகிரி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
அருணகிரி வேறு ஒரு பெண்ணுடன் செல்லிடப்பேசியில் பேசியதை, மனைவி சங்கீதா கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து மனமுடைந்த சங்கீதா கடந்த ஜூலை 9-ஆம் தேதி விஷம் சாப்பிட்டாராம்.
உடனே உறவினர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மதுரையில் சிகிச்சை முடிந்து காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் சங்கீதாவை கொண்டு வரும் போது வழியிலே உயிரிழந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.