பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய இளைஞா்கள் இருவரை, சிவகங்கை நகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்புச் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் நபா்களை கைது செய்ய, நகா் காவல் ஆய்வாளா் மோகன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்தாா்.
இது குறித்து தனிப்படை போலீஸாா் விசாரணை செய்ததில், சிவகங்கை அருகே சக்கந்தி மில் கேட் பகுதியைச் சோ்ந்த பிரபுதேவா (28), மட்டாகுளம் கிராமத்தைச் சோ்ந்த சோணைக்குமாா் (22) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதையடுத்து, பிரபுதேவா மற்றும் சோணைக்குமாா் ஆகிய இருவா் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனம், தங்க நகைகளை கைப்பற்றினா்.