மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனத்தில் திமுகவினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்
மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் திமுகவினர் மின் உயர்வைக் கண்டித்து அவரவர் வீடுகளின் முன்பு செவ்வாய்கிழமை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் திமுகவினர் மின் உயர்வைக் கண்டித்து அவரவர் வீடுகளின் முன்பு செவ்வாய்கிழமை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் கரோனா நோய் தொற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வேலையின்றி போதிய வருமானம் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழக அரசு மக்களை வஞ்சிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது மேலும் கண்டனத்திற்கு உரியது.
இதை கண்டிக்கும் வகையில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் திமுக வினர் கட்சியின் தலைமைக்கழக உத்தரவின்படி தங்களது வீடுகளின் முன் கருப்பு ஏந்தி கொடி தமிழக அரசுக்கு எதிராக மின் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகர்ச் செயலாளர் நாகூர்கனி, மீனவரணி அமைப்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். மானாமதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் அண்ணாதுரை, ராஜாமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இளையான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன், நகர்ச் செயலாளர் நஜூமுதீன் ஆகியோர் பங்கேற்றனர். குமாரகுறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி அமைப்பாளர் பிரபு உள்ளிட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். மேற்கண்ட மூன்று ஒன்றியப் பகுதிகளிலும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.