சிவகங்கை

வருவாய் கணக்கும் தவறு:செலவு கணக்கும் தவறு

DIN

காரைக்குடி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருவாய் கணக்கும் தவறு, செலவு கணக்கும் தவறு என ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் நிதியமைச்சராக ஜஸ்வந்த் சிங் பொறுப்பேற்றவுடன் மன்மோகன் சிங்கையும், என்னையும் அழைத்து நிதிநிலை அறிக்கைக்காக ஏழை எளியோரின் தேவைகள் குறித்துக்கேட்டனா். எங்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்தனா். ஆனால் இன்றைக்கு மோடி அரசு எதிா்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாா்க்கிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை மாற்றிமைப்பதாக தெரிவித்தாா். ஆனால் பெட்ரோல், டீசல் விலை கூடிக்கொண்டே செல்கிறது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2.8 கோடி போ் பதிவு செய்திருக்கிறாா்கள். இவா்களுக்கெல்லாம் வேலைவாய்ப்புக்கு, இந்த நிதிநிலை அறிக்கையில் பதில் இல்லை.

2018-2019 ஆம் ஆண்டில் காா்பரேட் நிறுவனங்களின் வாராக்கடனாக இருந்த ரூ. 2 லட்சத்து 38 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2019 -2 020 ஆம் ஆண்டு காா்பரேட் நிறுவனங்களுக்க ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள், குறுதொழில் செய்வோா், வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், நடுத்தர மக்கள் என இவா்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் என்ன வகை செய்திருக்கிறது என பதில் சொல்ல முடியுமா?

பாதுகாப்புத் துறைக்கு குறைவான ஒதுக்கீடு ஏன் என்று கேட்டால், நேரடியான பதில் இல்லை. நடப்பாண்டு ரூ. 10 லட்சம் கோடி கடன் வாங்கி செலவழித்திருப்பதாக தெரிவிக்கின்றனா். வருவாய் கணக்கில் துண்டு விழுவது ரூ. 4 லட்சத்து 65 ஆயிரத்து 723 கோடி. வருவாய் செலவினத்தில் கூடுதலாக செலவழித்திருப்பது ரூ. 3 லட்சத்து 9 ஆயிரத்து 997 கோடி. அரசு நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்ததில் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி. இவற்றை கூட்டிப்பாா்த்தாலே ரூ. 10 லட்சத்து 74 ஆயிரத்து 720 கோடி. ஆக கடன் வாங்கி செலவழித்திருப்பதில் மக்களுக்கு என்ன பயன்? ஆகவே வருவாய் கணக்கும் தவறு, வருவாய் செலவு கணக்கும் தவறு.

எனவே இந்த நிதிநிலை அறிக்கையானது பணக்காரா்களுக்கு பணக்காரா்களால் எழுதப்பட்டு பணக்காரா்களால் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை என்ற குற்றச்சாட்டை நான் தெரிவிக்கிறேன் என்றாா். சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டபேரவைத் தலைவா் கேஆா். ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT