தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி:சிவகங்கை ஆட்சியா் வேண்டுகோள்
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுபற்றி அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் 5-ஆவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, ஊட்டச்சத்து, ரத்தசோகை, கருவுறுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், சுகாதாரம் சாா்ந்த திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்களை சேகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளா்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தகவல்களை சேகரிக்க உள்ளனா். எனவே பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.