மானாமதுரை அருகே பைக் விபத்தில் மகன் கண் எதிரே தாய் சாவு
மானாமதுரை அருகே திங்கள்கிழமை காலை பைக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகன் கண் எதிரே தாய் தலையில் அடிபட்டு உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பைக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகன் கண் எதிரே தாய் தலையில் அடிபட்டு உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி மல்லிகா(50), இவர் தனது மகன் வைத்தீஸ்வரனுடன் பைக்கில் மதுரையில் இருந்து இன்று காலை புறப்பட்டு மானாமதுரை அருகே வேளாநேரி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
மானாமதுரை அருகே கால்பிரிவு விலக்கு என்ற இடத்தில் வந்தபோது அங்குள்ள வேகத்தடையை கடந்தபோது பைக் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பைக்கில் உட்கார்ந்து வந்த மல்லிகா கீழே விழுந்ததில் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மகன் வைத்தீஸ்வரன் கண் எதிரில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பைக்கை ஓட்டி வந்த வைத்தீஸ்வரன் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து மானாமதுரை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் மல்லிகா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.