முகப்பு
தமிழ்நாடு

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்

தென்காசி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு...

Updated On : 13 மார்ச், 2026 at 7:23 AM
ஓபிஎஸ்
பகிர்:

தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்துக்கொண்ட ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி எனவும் அவர் பொதுச் செயலாளர் ஆனது முதல் 10 தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளதாகவும் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இன்று தென்காசி மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூரில் இன்றும் முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் நாளையும் பிரசாரம் செய்கிறார்.

முன்னதாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு கத்துகிறார் என்று தெரியவில்லை. ஒரு கருத்தை பக்குவமாக, மக்கள் ஏற்றுக்கொள்ளும்விதத்தில் சொல்ல வேண்டும். கத்திப் பேசினால் மக்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறார். அது தவறு.

அந்த நபரின் பெயரைச் சொல்லக்கூட நான் விரும்பவில்லை. ஏனென்றால் ஊர்ந்து சென்று பதவியைப் பெற்று காலைத் தொட்டு, பதவி தந்தவருக்கே நன்றி இல்லை. ஒரு நன்றியில்லாத நபர் இன்று அரசியலில் இருக்கிறார் என்றால் அது அவராக மட்டுமே இருக்க முடியும்.

'தான் திறமையாக ஆட்சி செய்வேன், தன்னை முதலமைச்சராக்க வேண்டும்' என்று சில கைக்கூலிகளை வைத்துக்கொண்டு கட்சித் தலைமையிடம் சொல்லவைத்தார். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதையும் மாற்றி பொதுச் செயலாளர் ஆனார். தன்னை பொதுச் செயலாளராக நியமித்துக்கொண்ட ஒரே நபர் அவராகத்தான் இருப்பார். அவர் வந்தபின்னர் 10 தேர்தலில் தோல்வியைத்தான் அடைந்தார். மக்கள் ஏற்றுக்கொள்ளமால்தான் அவர் தோல்வி அடைந்தார். அவர் கொடுக்கும் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் பொய். மக்கள் காதுகொடுத்து கேட்க மறுக்கிறார்கள். அவருக்கு பதவி கொடுத்தவருக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரை பழித்துப் பேசலாமா? துரோகம் இழைத்துவிட்டார். நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வரும் தேர்தலிலும் அதுதான் நடக்கும்" என்றார்.

summary

I dont even want to mention his name: OPS criticized EPS

முழு கட்டுரையைப் படிக்க →