சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?
புதிய கட்சித் தொடங்கியிருக்கும் சசிகலா, தன்னுடைய கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்று அறிவித்திருப்பது பற்றி..
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சித் தொடங்கியிருக்கும் சசிகலா, தன்னுடைய கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்று அறிவித்திருக்கிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தமாகா, தென்னந்தோப்பு சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், நான்கு தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தின் மூலம் தேர்தலை சந்திக்க உள்ளோம். எல்லாத் தாவரங்களையும் செடி, கொடி, மரம் என்பர். தென்னையை மட்டுமே தென்னம்பிள்ளை என்பர். தமிழக மக்களின் பிள்ளையாக தமாகா மாறும், அதற்காகப் பணியாற்றுவோம் என்று கூறியிருந்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப். 24-ஆம் தேதி அறிவித்த நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டிருப்பதாகவும், அதற்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
மக்கள் நலனுக்காக புதிய கட்சியைத் தொடங்குகிறேன் எனக் கூறி, அண்ணா, எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில், பரபரப்பைக் கூட்டியிருந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று கட்சிக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்.
இன்று சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.