மானாமதுரை பகுதியில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு இல்லை: மாவட்ட ஆட்சியர்
மானாமதுரை பகுதியில் கருப்புப்பூஞ்சை பாதிப்பு கிடையாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
மானாமதுரை பகுதியில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு கிடையாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மானங்காத்தான், சின்னகண்ணனூர் ஆகிய கிராமங்களில் காய்ச்சலுக்கான சிறப்புச் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று காய்ச்சல் பரிசோதனை செய்துக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி இந்த கிராமங்களுக்கு நேரடியாக வந்து அங்கு நடந்த காய்ச்சல் சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் கூறுகையில், மானாமதுரை ஒன்றியம் சின்னகண்ணனூர், மானங்காத்தான் கிராமப் பகுதிகளில் கருப்புபூஞ்சை பாதிப்பு இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர். இது போன்ற சந்தேகங்களை நீக்கும் வகையில் மருத்துவர்களிடம் உடல் பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். மானாமதுரை பகுதியில் இந்த கருப்புப்பூஞ்சை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டியது கிடையாது. இந்த நோய் தொற்றுக்கு சிவகங்கை மாவட்ட மருத்துவமனைகளில் போதிய அளவு மருத்துவ வசதிகள் உள்ளன. பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் தாங்களாகவே மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடாமல் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உடலை பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.