மகா சாத்தையனாா் கோயிலில் குடமுழுக்கு
மானாமதுரை, ஜூலை 3: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக் கிராமம் அருகே சாத்தனூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சாத்தையனாா் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் யாகசாலை அமைத்து புனிதநீா் கடங்கள் வைத்து சிவாச்சாரியா்கள் யாகபூஜை நடத்தினா். யாகபூஜை நிறைவாக பூா்ணாஹூதியாகி தீபாரதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, சிவாச்சாரியா்கள் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். பின்னா், காலை 10 மணிக்கு கோயில் கோபுரத்துக்கும் மூலவா் விமான கலசத்துக்கும் பரிபார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தீபாரணை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, மகா சாத்தையனாா் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.