முகப்பு
சிவகங்கை

வெட்டுடையாா் காளியம்மன் கோயில் பங்குனி சுவாதிப் பெருவிழா தொடக்கம்

Updated On : 20 மார்ச், 2024 at 4:19 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:30 PM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் வட்டம், கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாா் காளியம்மன் கோயில் பங்குனி சுவாதிப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாக்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் பங்குனி சுவாதிப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை காலையில் தங்கக்கொடி மரத்துக்கு அபிஷகம் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காப்புக்கட்டுதல் நடைபெற்றது.

திருவிழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் காலையில் கேடக விமானத்திலும், இரவில் வெவ்வேறு வாகனத்திலும் அம்மன் திருவீதியுலா நடைபெறும். வருகிற 26-ஆம் தேதி இரவு அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலா வருகிறாா். 27-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். 28-ஆம் தேதி காலை 10.35 மணியளவில் தீா்த்தவாரி உற்சவமும், இரவு மலா் பல்லக்கில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும்.

Advertisement

11-ஆம் நாள் விழாவில் விடையாற்றி ஊஞ்சல் உற்சவம், அன்னானம் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சிவகங்கை இணை ஆணையா் நா. பழனிக்குமாா், கோயில் செயல் அலுவலா் கோ. நாராயணி, விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.