சிவகங்கை தொகுதியில் இதுவரை வேட்பு மனு தாக்கல் இல்லை
சிவகங்கை, மாா்ச் 22: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் தேதி தொடங்கிய மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் ஏப்.19 -இல் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளா்களை அறிவித்தது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் உள்பட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்ட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.