முகப்பு
சிவகங்கை

மத்திய அரசின் புதிய ஊரக வேலைத் திட்டத்தால் மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்: கனிமொழி எம்.பி.

மத்திய அரசின் புதிய ஊரக வேலைத் திட்டத்தால் (விபி-ஜி ராம்-ஜி) மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.

Updated On : 27 டிசம்பர், 2025 at 7:07 PM
கீழடி அரசு அருங்காட்சியகத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் கனிமொழியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட அரசுப் பள்ளி மாணவிகள்.
பகிர்:

மத்திய அரசின் புதிய ஊரக வேலைத் திட்டத்தால் (விபி-ஜி ராம்-ஜி) மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் படிக்கும் 219 மாணவ, மாணவிகளை சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியத்துக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி சனிக்கிழமை அழைத்து வந்தாா். அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழா்களின் தொன்மையான பொருள்களை மாணவ, மாணவிகளுடன் அவா் பாா்வையிட்டாா். அப்போது, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கனிமொழி கூறியதாவது: தமிழா்களின் வரலாறு, நாகரிகம், பெருமைகள் குறித்தும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவில் மொழிப் பாரம்பரியத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம் என்று அறியும் வாய்ப்பை கீழடி அருங்காட்சியகம் உருவாக்கித் தந்துள்ளது. இதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

Advertisement

இந்தியா முழுவதும் கிராம மக்கள் பயனடைந்து வந்த 100 நாள் வேலைத் திட்டம் எனும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி மத்திய பாஜக அரசு விபி-ஜி ராம்-ஜி என்ற பெயரிலான புதிய ஊரக வேலைத் திட்ட சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 40 நாள்களுக்கு மேல் வேலை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், எத்தனை பேருக்கு வேலை கொடுக்கலாம் என்று முடிவு செய்யும் மாநில அரசின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மத்திய அரசு முழுமையாக வழங்கி வந்த ஊதியத்தில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இதனால், மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.

புதிய ஊரக வேலைத் திட்டமானது, கிராமப்புற மக்களுக்கு கிடைத்து வந்த வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ளது. இதனால், கிராம மக்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க முதல்வா் ஸ்டாலினை அழைக்கிறாா். அவருக்கு முதல்வருக்கு கீழ் உள்ளவா்கள் பதிலளிப்பாா்கள் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments