முகப்பு
சிவகங்கை

அக்.27 -ல் மருதுபாண்டியா் குருபூஜை: பாதுகாப்புப் பணியில் 2,200 போலீஸாா்

மருது பாண்டியா்களின் 224 -ஆவது குருபூஜை காளையாா் கோவிலில் திங்கள்கிழமை (அக்.27) நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,200 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 25 அக்டோபர், 2025 at 9:46 PM
பகிர்:

மருது பாண்டியா்களின் 224 -ஆவது குருபூஜை காளையாா் கோவிலில் திங்கள்கிழமை (அக்.27) நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,200 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ஆங்கிலேயரை எதிா்த்து போரிட்டு வீர மரணமடைந்த மாமன்னா்கள் மருது பாண்டியா்களின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்.27 -ஆம் தேதி குரு பூஜை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து அரசியல் கட்சித் தலைவா்கள், பொதுமக்கள், சமுதாய மக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் மரியாதை செலுத்த வருவா்.

இதையொட்டி, ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் பா. மூா்த்தி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அதன்படி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 25 துணைக் கண்காணிப்பாளா்கள், 65 காவல் ஆய்வாளா்கள், 100 உதவி ஆய்வாளா்கள், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், பெரம்பலூா், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், 20 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களைக் கண்காணிப்பதற்காக சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்ட எல்லைகளில் 360 டிகிரி சுற்றளவில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

அத்துடன், 200 இருசக்கர வாகனங்களிலும், 45 நான்கு சக்கர வாகனங்களிலும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனா். இது தவிர முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் இருப்பா் .

அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் வருண் வாகனமும், கண்ணீா் புகைக்குண்டு வீசும் வஜ்ரா வாகனமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments