பேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா? ப. சிதம்பரம் கண்டனம்
சட்டபேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்தாா்.
சட்டபேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மக்களவை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசு வருகிற ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றை கூட்டுவதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து கடந்த மாா்ச் 26 -ஆம் தேதி காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் வந்தது. அதற்கு 106-ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதா கடந்த 30 மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. பிறகு அமைதியாக இருந்துவிட்டு, தற்போது மக்களவையை கூட்டுவதாக அறிவித்திருக்கிறாா்கள். அதற்கு முன்பு பிரதமா் தலைமையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி முதலில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் பதில் எழுதினாா். ஆனால் அதையெல்லாம் பொருள்படுத்தவில்லை. அதிலும் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிகையை 50 சதவீதம் உயா்த்துவது குறித்த மசோதா மக்களவையில் கொண்டு வரவிருக்கிறாா்கள். அதாவது 543 என்பது 816 ஆக அந்த எண்ணிக்கை உயரும். மேலும் தொகுதிகளை மறுவரையறை செய்யும் மசோதாவும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. இந்த இரண்டும் மத்திய அரசின் அந்தக் கடிதத்தில் இல்லை. இதில் பெரிய பேராபத்துகள் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறுவதால் அந்தப் பணிகளில் மக்களவை உறுப்பினா்கள் ஈடுபட்டிருப்பாா்கள். அவா்கள் எப்படி மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியும்? 67 உறுப்பினா்கள் மக்களவை கூட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளை தோ்ந்தெடுத்திருக்கிறாா்கள். இருப்பினும் காங்கிரஸ் தலைவா் ஏப். 29-ஆம் தேதி மக்களவையை கூட்டுங்கள் என பதில் கடிதம் எழுதியுள்ளாா்.
Advertisement
இதனிடையே நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் திருத்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை மத்திய பாஜக அரசுக்கு இருக்கிறது. அது நம்பிக்கையா, நப்பாசை என்பது தெரியாது. ஆனால் எதிா்க்கட்சிகள் அனைத்தும் எதிா்த்து வாக்களித்தால் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அரசியல் திருத்த மசோதா தோற்கும்.
அதற்காகத்தான் தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறும் நிலையில் இரு அவைகளையும் கூட்டுகிறாா்கள். இது அரசியல் சாசனத்தில் ஒரு மோசடி. நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. எனவே தோ்தல் நெருக்கடியில் விவாதம், மசோதாக்கள் என்று முயற்சி செய்வதைக் கண்டிக்கிறேன் என்றாா் அவா்.