'அரசியல் சாசன மோசடி' தேர்தல் நெருக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்: ப. சிதம்பரம் கண்டனம்
தேர்தல் நெருக்கடிக்கு இடையே நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ப. சிதம்பரம் கண்டனம்...
மாநிலத் தேர்தல் நெருக்கடியில் நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதம் மற்றும் மசோதாக்கள் தாக்கல் என்ற முயற்சியை கண்டிப்பதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடி எம்.பி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:
"வருகின்ற ஏப்ரல் மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Advertisement
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816 ஆக (50 சதவீதம் உயர்வு) அதிகரிப்பது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கூட்டத்தைக் கூட்டுவது அரசியல் சதியாகும்.
முக்கியமான 67 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பணிகளால் அவைக்கு வர முடியாத சூழலை உருவாக்கி மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயல்வதாகக் கூறப்படுகிறது.
தேர்தல்கள் முடிந்த பிறகு, ஏப்ரல் 29 ஆம் தேதி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பால் தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் மேலும் குறையும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர நடவடிக்கையை ஒரு அரசியல் சாசன மோசடி என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறேன்" என்றார்.