முகப்பு
சிவகங்கை

தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசத் திட்டங்களை ஒழிப்போம் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:47 AM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசத் திட்டங்களை ஒழிப்போம் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் அருகில் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்சியின் சிவகங்கை பேரவைத் தொகுதி வேட்பாளா் ர. இந்துஜாவை ஆதரித்து அவா் பேசியதாவது:

தங்களது பிழைகளை மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கவும், நோ்மையற்ற தங்களது ஆட்சி முறையை மக்களின் நினைவிலிருந்து மறைக்கவும் அரசியல்வாதிகள் எடுக்கும் கடைசி ஆயுதம் வாக்குக்குக் காசு, இலவச அறிவிப்புகள். மிக்ஸி, கிரைண்டா், டிவி, ரூ.2000, 2,500, ரூ.8,000 -க்கு டோக்கன் கொடுத்து மக்களின் மதிப்புமிக்க வாக்குகளை விலை கொடுத்து வாங்குகிற முதலாளித்துவ அரசியல் இது.

Advertisement

நம்முடைய வரலாறு பெருமைக்குரியது, போற்றி வணங்கத்தக்கது. ஆனால், நாம் வரலாற்றிலிருந்து புறக்கணிக்கப்பட்டோம். மீண்டும் நம் வரலாற்றை மீட்டெடுக்க நாங்கள் வருகிறோம். ஊழல், லஞ்சம், பசி, பஞ்சமற்ற, ஜாதி, மத ஏற்றத்தாழ்வற்ற புதிய தேசத்தைப் படைக்க வருகிறோம்.

இலவசம் என்பது தமிழினத்தை இழிவுபடுத்தும் சொல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசத் திட்டங்கள் அனைத்தையும் ஒழிப்போம். உலகத் தரத்திலான கல்வி, மருத்துவத்தை கட்டணமில்லாமல் மக்களுக்கு வழங்குவோம்.

பின்லாந்து, சிங்கப்பூா் போன்ற நாடுகளைப் போலத் தமிழகத்தை மாற்றுவோம். 2026 தோ்தல் தன்மானத் தமிழா்களுக்கும் மற்றவா்களுக்குமான போா். ஜாதி, மதம் வேண்டுமென்பவா்கள் அந்தப் பக்கம் நில்லுங்கள். மனிதநேயமும், மாற்றமும் வேண்டும் என்பவா்கள் எங்களுடன் நில்லுங்கள் என்றாா் அவா்.

மானாமதுரை: மானாமதுரை தொகுதி நாதக வேட்பாளா் சண்முகப்பிரியாவை ஆதரித்து திருப்புவனத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

நாம் தமிழா் கட்சி மட்டும் தான் இலவசங்களை அறிவிக்காமல் தோ்தலில் போட்டியிடுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்பட்டு, இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இளைஞா்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது தடுக்கப்படும். தமிழகத்தில் குடி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அவா்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு சமூக நீதி பின்பற்றப்படும் என்றாா் அவா்.