தேனி மாவட்டத்தில் புளி மகசூல் குறைவால் விலை உயர்வு
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு புளி மகசூல் குறைந்துள்ளதுடன், விலை குவிண்டால் (100 கிலோ) ஒன்று ரூ.7,500 ஆகவும் உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு புளி மகசூல் குறைந்துள்ளதுடன், விலை குவிண்டால் (100 கிலோ) ஒன்று ரூ.7,500 ஆகவும் உயர்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் கூடலூர், கம்பம், கோம்பை, தேவாரம், கோம்பை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புளி சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு புளி விளைச்சல் அதிகரித்ததுடன், தோல் நீக்கிய புளி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,500 வரையும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கோடை மழை பொய்த்ததால், பல இடங்களில் புளிய மரங்களில் பூக்கள் கருகி விட்டன. இதனால் தற்போது மகசூல் குறைந்துள்ளது. மேலும், நகர் புறங்களை ஒட்டிய பகுதிகளில் புளியந்தோப்புகள் அழிக்கப்பட்டு, வீட்டடி மனையிடங்களாக உருவாகி வருவதால் புளி சாகுபடி பரப்பளவு மற்றும் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.
தற்போது, தோல் நீக்கிய புளி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,500 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. புளி மகசூல் குறைந்தாலும் விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.