தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கலப்பு திருமணம் செய்த குடும்பங்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் முதல்கட்ட விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் வசிக்கும் சூழ்நிலையில், காதல் திருமணம் மற்றும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் கலப்பு திருமணம் செய்வோர் அதிகரித்து வந்ததால், வெளியூர்களில் கலப்பு திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்கு வந்தால் அந்த குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அந்த கிராமத்தில் முடிவு செய்யப்பட்டதாம். இந்நிலையில், கலப்பு திருமணம் செய்த குடும்பங்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுக்கொடுத்தனர்.
அதில், தங்களை ஊரில் நடக்கும் எந்த திருவிழா, திருமணம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில்லை. ஊரில் நடக்கும் பொது கோயில் திருவிழாவிற்கு கூட வரிவசூல் செய்வதில்லை. இது போன்று பல ஆண்டுகளாக தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் தாங்கள் அகதியை போல் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கத்கை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வித்தனர்.
இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஊத்துபட்டி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.