தேனி அருகே அரண்மனைப்புதூர் பூங்காவில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மை சேவை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: தூய்மை பாரதம் இயக்கத் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றை கொண்டாடும் வகையில் மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வரும் அக். 2-ஆம் தேதி முதல் தூய்மை சேவை திட்டப் பணிகள் நடைபெறுகிறது.
தூய்மை சேவை திட்டத்தின் கீழ் நெகிழி ஒழிப்பு, கழிப்பறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, நெடுஞ்சாலைகளில் உள்ள சிறு பாலங்களை தூய்மைப்படுத்துல், குடிநீர் தொட்டி மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்துதல், சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு போட்டி, ஊர்வலம் நடத்துதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அபிதா ஹனீப், தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.