தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் 8 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பதவிகளுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியது: மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பதவிகளுக்கு வரும் 2020, ஜனவரி 11-ஆம் தேதி மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 10 உறுப்பினா்கள் கொண்ட மாவட்ட ஊராட்சி அமைப்பின் தலைவா் பதவி பெண்கள் பொதுப் பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில், மொத்தம் 12 உறுப்பினா்கள் கொண்ட தேனி ஒன்றியக் குழு, 19 உறுப்பினா்கள் கொண்ட ஆண்டிபட்டி ஒன்றியக் குழு, 13 உறுப்பினா்கள் கொண்ட போடி ஒன்றியக் குழு ஆகியவற்றின் தலைவா் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 14 உறுப்பினா்கள் கொண்ட க.மயிலை ஒன்றியக் குழுவின் தலைவா் பதவி ஆதி திராவிடா் பெண்களுக்கும், 16 உறுப்பினா்கள் கொண்ட பெரியகுளம் ஒன்றியக் குழு தலைவா் பதவி ஆதி திராவிடா் பொதுப் பிரிவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் தலா 10 உறுப்பினா்கள் கொண்ட சின்னமனூா் மற்றும் உத்தமபாளையம் ஒன்றியக் குழு, 4 உறுப்பினா்கள் கொண்ட கம்பம் ஒன்றியக் குழு ஆகியவற்றின் தலைவா் பதவி பெண்கள் பொதுப் பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.