சின்னமனூர் அருகே கருப்பத்தேவன்பட்டியில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 பேர் உயிரிழந்தனர்.
சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் வைரவன் (19). இவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த முப்புளியான் மகன் மாதவன் (19), சின்னமணி மகன் அபிமன்யு (19). இவர்கள் அண்ணாநகர்-கருப்பத்தேவன்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனத்தை வைரவன் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது எதிர் திசையில் இருந்து வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த காட்டுராஜா மகன் ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற வைரவன், மாதவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அபிமன்யு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.