மேகமலை வனச்சரணாலயத்தில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்
தேனி மாவட்டம், மேகமலை வன உயிரினச்சரணாலய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், மேகமலை வன உயிரினச்சரணாலய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேகமலை வன உயிரின சரணாலயத்தில் கம்பம் கிழக்கு கூடலூர், சின்னமனூர் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உள்பட்ட சுருளிப்பட்டி காப்புக்காடு, நாராயணத்தேவன்பட்டி பீட், யானைக்கஜம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காய்ந்த சருகுகள் மீது பிடித்த தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் விலங்குகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. கம்பம் கிழக்கு வனச்சரகர் தினேஷ் தலைமையில் தீத் தடுப்பு காவலர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி வனச்சரகர் தினேஷ் கூறியது: பனிக்காலம் முடிந்து, கோடை காலம் தொடங்கும்போது, மரக்கிளைகள், இலைகள் உதிர்ந்து, காய்ந்து சருகாகக் கிடக்கும். அந்த நேரங்களில் அதிக வெயில் காரணமாகவோ அல்லது மரங்களில் ஏற்படும் உராய்வால் தீப்பிடிக்கிறது. மேலும் வனப்பகுதியில் தீப் பிடிப்பதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.