தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, வாய்க்கால்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சட்டத்துக்கு விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
அதன்பேரில், அப்பகுதியில் ரோந்து சென்ற உத்தமபாளையம் போலீஸார், கோகிலாபுரத்தில் சின்னத்தம்பி (45) என்பவர் சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.
பெரியகுளம்: தேவதானப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த வாசாமணி (45) என்றும், அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர்.