ஆசிரியர்கள் போராட்டத்துக்கு சென்றதால்பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்
ஆண்டிபட்டி அருகே ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்துக்கு ஆசிரியர்கள் சென்றுவிட்டதால் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு
ஆண்டிபட்டி அருகே ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்துக்கு ஆசிரியர்கள் சென்றுவிட்டதால் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ். ரெங்கநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அக்கிராமத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் இப்பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதனால், காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளி பூட்டப்பட்டிருந்ததை கண்டு வாசலிலேயே மதியம் வரை காத்திருந்தனர்.
விவசாய கூலி தொழிலாளர்களான தங்களது பெற்றோர்கள் விவசாயப் பணிகளுக்கு சென்றுவிட்டதால் உடனடியாக வீடு திரும்ப முடியாமலும், மதிய உணவு இல்லாமலும் பள்ளிக்கு வெளியிலேயே மாணவர்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.
ஆசிரியர்களின் போராட்டத்தால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.