முல்லைப் பெரியாறு அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில், வியாழக்கிழமை துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில், வியாழக்கிழமை துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழுவுக்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு (ஐந்து நபர்கள் கொண்டது) அமைக்கப்பட்டது. துணைக்குழு தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் வி.ராஜேஷ், தமிழக பிரதிநிகளாக தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி கோட்டப் பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவிப் பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2018 நவம்பர் 20 இல் அணையின் நீர் மட்டம் 129.10 அடியாக இருந்தபோது பிரதான அணை, பேபி அணை, கேலரி, மதகுப்பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவு நீர் குறித்து ஆய்வு செய்தனர். மீண்டும், அவர்கள் 2018 டிசம்பர் 28 இல் அணையில் ஆய்வு செய்வதாக இருந்தது. இதனிடையே குழுத் தலைவர் ராஜேஷ் வரமுடியாத காரணத்தால் அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் வியாழக்கிழமை அணையில் ஆய்வு செய்ய உள்ளனர். மாலையில் குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.