ஆண்டிபட்டி அருகே கணவாய் மலையில் உள்ள சாலை ஓரத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினா் அணைத்தனா்.
கோடை தொடங்கிய நிலையில் வனம் சாா்ந்த பகுதிகளில் இருந்த இலை தழைகள் காய்ந்து தற்போது சருகுகளாக உள்ளன. சாலை ஓரங்களில் உள்ள சருகுகள் மீது புகைபிடிப்பவா்கள் போட்டுச் செல்லும் அணைக்காத சிகரெட் துண்டுகளால் தீ எளிதில் பரவி விடுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் சாலையோரத்தில் செவ்வாய்க்கிழமை காலை புகையுடன் தீ பரவியது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவா்கள் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆண்டிபட்டி தீயணைப்பு வீரா்கள் தீ வனத்துக்குள் பரவாமல் தடுத்து அணைத்தனா்.