கம்பத்தில் விபத்து: இந்து முன்னணி நிர்வாகி சாவு
கம்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இந்து முன்னணி நிர்வாகி பலியானார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே க. புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார்(33).
இவர் இந்து முன்னணி கம்பம் ஒன்றிய பொதுச்செயலாளராக உள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை கருநாக்கமுத்தன்பட்டி முல்லைப்பெரியாற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவனின் உடலை பார்ப்பதற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் க.புதுப்பட்டி நோக்கி சென்றுள்ளார்.
கோசந்திர ஓடை பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது கண்இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட குமார் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே.சிலைமணி காவல்துறையினருடன் சென்று குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சரக்கு வாகனத்தை ஓட்டிய கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்த பாலமுருகன்(20) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான ஸ்ரீகுமாருக்கு, மனைவி மற்றும் 6 வயதில் ஆண் குழந்தை, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.