தே.ஜ. கூட்டணி பொதுக் கூட்டம்! இபிஎஸ் படம் இல்லை!
தே.ஜ. கூட்டணி பொதுக் கூட்ட நுழைவு வாயிலில் இபிஎஸ் படம் இல்லாதது பற்றி...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்ட நுழைவு வாயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை.
இதனால் பொதுக் கூட்டத்துக்கு வருகைதந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
திருச்சியில் இன்று (மார்ச் 11) மாலை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழகத்துக்கான தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் மாநிலத் தலைவர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்துக்கு வருகை தருபவர்களை வரவேற்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் திருச்சி முழுவதும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கூட்டம் நடைபெறும் மைதானத்தின் நுழைவு வாயில்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் புகைப்படங்கள் அடங்கிய நுழைவு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நுழைவு வளைவுகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படம் இல்லாதது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுழைவு வளைவுகளின் இரு பக்கங்களிலும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணியின் புகைப்படங்கள் பெரியளவில் இடம்பெற்றுள்ளன.
மேல் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மத்திய அமைச்சர் எல். முருகன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு நுழைவு வளைவுகளில் இரு பக்கங்களிலும் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்களும் மேலே, கூட்டணித் தலைவர்களின் புகைப்படங்களும் உள்ளன. அதிலும், எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இல்லை.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.