நேர்மையான தேர்தலுக்காகவே அதிகாரிகள் மாற்றம்! திமுகவுக்கு ஏன் பயம்? இபிஎஸ்
தமிழகத்தில் தலைமைச் செயலர், டிஜிபி மாற்றப்பட்டது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்...
நேர்மறையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றே தமிழகத்தில் அதிகாரிகள் மாற்றம் நடந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார் .
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக அரசின் தலைமைச் செயலர் நா. முருகானந்தம் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி என். சாய் குமாரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதேபோல தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் ஆயுதப் படை காவல் துறை தலைமை இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்குப் பதிலாக சந்தீப் மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
தமிழக அரசின் தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி ஆகியோர் மாற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி பதிலளிக்கையில்,
"திமுகவினர் அதிகாரிகளை நம்பித்தான் இருக்கிறார்கள். மக்களை நம்பி இல்லை. யாரை நியமித்தால் என்ன? இவர்களுக்கு என்ன கஷ்டம்?
நேர்மறையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் நினைக்கின்றனர், அந்த அடிப்படையில் அதிகாரிகளை மாற்றுகிறார்கள். யார் வந்தால் என்ன? நமக்கு மக்கள்தான் வாக்களிக்கிறார்கள். 5 ஆண்டுகளாக அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாகவே இருந்தனர். எங்களுக்கு எந்த அதிகாரி வந்தாலும் பிரச்னையில்லை.
மக்களுடைய எதிர்ப்பு, பல கட்சிகளின் எதிர்ப்பு தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சென்றிருக்கும் என்று நான் நினைக்கிறேன். நடுநிலையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகவே அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்ததாக நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.