ஹிந்துக்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் ராகுல்: பாஜக கண்டனம்!
ராகுல் காந்தியின் பேச்சு குறித்து பாஜக கண்டனம்..
ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்ததாக பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் அமித் மால்வியா தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் தரவுகள், புத்தாக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் தரவுகள், புத்தாக்கம் குறித்த கேள்விகளை இந்திய அரசியல்வாதிகள் கலந்தாலோசிக்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய வளம்.
அந்த வளத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? அதன் தன்மை என்ன? அந்த வளம் யாரிடம் உள்ளது? அதை யார் அணுக முடியும்? அவர்களுக்கு என்ன விலை கொடுப்பது? இவ்வாறான கேள்விகளைத்தான் அரசியல்வாதிகள் விவாதிக்க வேண்டும்.
அதற்கு மாறாக நாம் எதைச் சாப்பிட வேண்டும்? இதைக் குடிக்க வேண்டுமா? பசுவின் கோமியம் உடலுக்கு நல்லதா? என்று விவாதிக்கக்கூடாது? இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மால்வியாவின் எக்ஸ் தளப் பதிவில்,
ஹிந்துக்களைக் கேலி செய்யவும், அவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் மத அடிப்படைவாதிகள் தான் இந்த சொற்களைப் பயன்படுத்துவர். இதுபோன்ற சொற்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை.
ராகுல் காந்தி தனது நிலைப்பாடு என்னவென்று இதன்மூலம் நிரூபித்துள்ளார். ஹிந்து மதத்தினரின் நம்பிக்கையை ராகுல் இழிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.