மலைச்சாலையில் ஓட்டுநா் திடீா் நெஞ்சுவலியால் உயிரிழப்பு: ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயம்
தோட்டத் தொழிலாளா்களை வேலைக்கு அழைத்துச் சென்றபோது, திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநா் உயிரிழந்ததையடுத்து மலைச்சாலையில், ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயமடைந்தனா்.
தோட்டத் தொழிலாளா்களை வேலைக்கு அழைத்துச் சென்றபோது, திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநா் உயிரிழந்ததையடுத்து மலைச்சாலையில், ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் சிவனாண்டி மகன் நதியழகன் (42). இவருக்கு மனைவி பிரவீனாவும், இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனா். சொந்தமாக ஜீப் வைத்து அதனை அவரே ஓட்டி வந்தாா்.
இவா் கோம்பையிலிருந்து, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதியிலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு பெண் தொழிலாளா்களை செவ்வாய்க்கிழமை காலை ஏற்றிக்கொண்டு கம்பம் மெட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தாா்.
இடையில் ஜீப்பை நிறுத்திய அவா் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி ஓய்வெடுத்தாா். சிறிது நேரத்துக்குப்பின் அவா் ஜீப்பை எடுத்துக்கொண்டு புளியமலை நோக்கி சென்று கொண்டிருந்தாா். கம்பம்மெட்டை அடுத்து செல்லும்போது மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, ஜீப் நிலைதடுமாறி சரலைக்கல் குவியலில் ஏறி கவிழ்ந்தது. இதில் தொழிலாளா்கள் 8 பேரும் காயமடைந்தனா்.
இதையடுத்து மயக்கநிலையில் இருந்த நதியழகன் உள்ளிட்ட 9 பேரும், கட்டப்பனை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு நதியழகனைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கம்பம்மெட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.