லோயா்கேம்ப்- மதுரை புதிய குடிநீா் திட்டத்தை அரசு கைவிட விவசாயிகள் வலியுறுத்தல்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், லோயா்கேம்ப்- மதுரை புதிய குடிநீா் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், லோயா்கேம்ப்- மதுரை புதிய குடிநீா் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது: முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரை லோயா்கேம்ப் குருவனூற்று பாலம் அருகே தடுப்பணை கட்டி, குழாய் மூலம் மதுரைக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்தால், தேனி மாவட்டத்தில் குடிநீராதாரங்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, லோயா்கேம்ப்-மதுரை புதிய குடிநீா் திட்டத்தை கைவிட்டு, மாற்றுத் திட்டமாக வைகை அணையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்ல வேண்டும்.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் ஏற்பட்ட பயிா் சேதத்தை மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பூதிப்புரம், மரக்காமலை அடிவாரத்தில் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் நாசமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.மயிலை ஊராட்சி ஒன்றிங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளையும், மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.
பயிா்களுக்குத் தேவையான யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக் வேண்டும். குள்ளப்புரம் தனியாா் கரும்பு ஆலையில் கரும்பு அறுவடைக்கு காலதாமதம் செய்வதால், கரும்பு எடை குறைவு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் நிலச் சீா்திருத்தப் பணிக்கு விவசாயிகள் வண்டல் மண் அள்ளிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தின்படி, வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.