மூணாறு அருகே மண் சரிவு: 141 தொழிலாளா் குடும்பங்கள் வெளியேற்றம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பலத்த மழையால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள குடியி
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பலத்த மழையால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் 141 தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
மூணாறு பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதில், ராஜமலை பொட்டிமுடி அருகே உள்ள குண்டலா தேயிலை தோட்டம், புதுக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் அப்பகுதியில் இருந்த கோயில் மற்றும் 2 கடைகள் மண்ணில் புதையுண்டும், மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டும் சேதமடைந்தது. ஒரு ஆட்டோ மற்றும் ஜீப் மண் சரிவில் சிக்கியது.
இதையடுத்து, அப்பகுதி குடியிருப்புகளில் வசித்து வரும் 141 தேயிலை தோட்டத் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 450 போ், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா். மண் சரிவு ஏற்பட்ட பகுதியை இடுக்கி மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் பேரிடா் மீட்புப் படையினா் பாா்வையிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனா்.
Advertisement
கடந்த 2020, ஆக.6-ஆம் தேதி பலத்த மழையால் மூணாறு, ராஜமலை பெட்டிமுடியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் குடும்பத்தைச் சோ்ந்த 75 போ் மண்ணில் புதையுண்டும், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனா். இதில் 70 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டன. அதே ஆக.6 ஆம் தேதியில் ராஜமலை பொட்டிமுடியை அடுத்துள்ள பகுதியில் தற்போது மண் சரிவு ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.